ஸ்ரீதேவி 
செய்திகள்

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல - கேரளா சிறைத்துறை டிஜிபி தகவல்

பல்வேறு சூழ்நிலை ஆதாரங்கள் நடிகை ஸ்ரீதேவி மரணம் விபத்து அல்ல என்பதை நிரூபிப்பதாக உள்ளன என்று கேரளா சிறைத்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளாவில் பல சிக்கலான கொலை வழக்குகளில் போலீசுக்கு துப்புதுலக்க உதவியாக இருந்த தடய அறிவியல் மருத்துவ நிபுணரான உமாதாதன் (வயது 73) கடந்த புதன்கிழமை மரணமடைந்தார். அவருடன் தனக்கு இருந்த அனுபவம் குறித்து கேரளா சிறைத்துறை டி.ஜி.பி. ரிஷிராஜ் சிங் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ள அதிர்ச்சிகரமான தகவல் வருமாறு:-

நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் உள்ள மர்மத்தை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் எனது நண்பர் டாக்டர் உமாதாதனிடம் அதுபற்றி கேட்டேன். பல்வேறு சூழ்நிலை ஆதாரங்கள் நடிகை ஸ்ரீதேவி மரணம் விபத்து அல்ல என்பதை நிரூபிப்பதாக உள்ளன. அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்தாலும், குளியல் தொட்டியில் உள்ள ஒரு அடி தண்ணீரில் மூழ்க முடியாது. சிலர் அழுத்தம் தராமல், ஒரு நபரின் கால்களோ அல்லது தலையோ ஒரு அடி தண்ணீரில் மூழ்காது. அது கொலையாக இருக்கலாம் என்று எனது நண்பர் கூறினார்.

இவ்வாறு டி.ஜி.பி. அதில் கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி தனது கணவருடன் ஒரு திருமண விழாவில் பங்கேற்க துபாய் சென்றபோது ஓட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் நீரில் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.