செய்திகள்

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி உடல் தகனம்

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இறுதிச்சடங்குகள் முடிந்த பின்னர் அரசு மரியாதையுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. #Sridevi #Sridevifuneral

மாலை மலர்

குடும்ப நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு மரணமடைந்தார். ஓட்டல் அறையின் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கியதால் உயிரிழந்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை செய்தனர்.

விசாரணைக்கு பின்னர் நேற்று அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதனை அடுத்து, அவரது உடல் எம்பால்மிங் செய்யப்பட்டு தனி விமானம் மூலம் நேற்றிரவு மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா கிரீன் ஏக்கர்ஸ் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்ட உடலை பார்த்த ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களை உறவினர்கள் தேற்றினர். ஸ்ரீதேவியின் உடலுக்கு குடும்பத்தினர் சடங்குகளை செய்தனர்.

பின்னர் அவரது உடல் அப்பகுதியில் உள்ள செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஸ்ரீதேவியின் உடலுக்கு தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.

மாநில அரசு சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்ட பின்னர், அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. மூவர்ணக்கொடி போர்த்தப்பட்ட அவரது உடல் வாகனத்தில் செல்ல, அதிகளவிலான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சோகத்துடன் பின்தொடர்ந்து வந்தனர்.