லக்னோ:
அயோத்தி பிரச்சினையை கோர்ட்டுக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்தது. இதையடுத்து, ‘வாழும் கலை’ நிறுவனர் ஸ்ரீரவிசங்கர், இந்து-முஸ்லிம் ஆகிய இருதரப்புக்கும் சமரசம் செய்ய முன்வந்துள்ளார். ஆனால், அவரது தலையீட்டுக்கு இருதரப்பும் ஆட்சேபனை தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஸ்ரீரவிசங்கர், நேற்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். இருவரும் 40 நிமிட நேரம் அயோத்தி பிரச்சினை பற்றி விவாதித்தனர்.
பின்னர், நிருபர்களிடம் பேசிய ஸ்ரீரவிசங்கர், “நான் ஒற்றுமையையும், இணக்கத்தையும் விரும்புகிறேன். அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்துவேன். அயோத்தி பிரச்சினைக்கு என்னிடம் இப்போதைக்கு சமரச திட்டம் இல்லை. அதனால், அதை யாரும் நிராகரிப்பதற்கான கேள்வியே எழவில்லை” என்று கூறினார். அவர் இன்று அயோத்திக்கு செல்கிறார்.