செய்திகள்

இலங்கை பிரதமர் ரனிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக இன்று கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது. #SriLankan #Ranil

மாலை மலர்

கொழும்பு:

இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி கண்டது. அவர் பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா கோரியும் அவர் மறுத்து விட்டார். ஆனாலும், புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ரனிலிடம் இருந்து சட்டம்- ஒழுங்கு மந்திரி பதவியை அதிபர் சிறிசேனா பறித்தார்.

இப்போது ரனில் மீது ராஜபக்சே கட்சி (இலங்கை மக்கள் முன்னணி), அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தை சபாநாயகர் கரு ஜெயசூரியாவிடம் அந்தக் கட்சி அளித்துவிட்டது. அதில் அவர் மீது நிதி மோசடி செய்ததாகவும், இனக்கலவரத்தை அடக்கத் தவறி விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த தீர்மானம் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் சுமார் 122 பேர் வாக்களித்தனர். இதையடுத்து, இலங்கை பிரதமர் ரனில் விக்ரம்சிங்கேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #tamilnews #SriLankan #Ranil