செய்திகள்

பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு - இலங்கை அரசு எச்சரிக்கை

குண்டு வெடிப்பை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் கொழும்பில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. #srilankablasts #EasterAttack

மாலை மலர்

கொழும்பு:

இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினர். அதில், 253 பேர் பலியானார்கள். குண்டு வெடிப்பால் ஏற்பட்ட பீதி இன்னும் நீங்கவில்லை.

இந்நிலையில், குண்டு வெடிப்பை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் கொழும்பில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிடக்கூடும் என்று இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பான போலீஸ் சுற்றறிக்கை கசிந்துள்ளது. அதில், கொழும்பு நகரின் நுழைவாயிலில் அமைந்துள்ள சில பாலங்கள், வடக்கு கொழும்பில் உள்ள மேம்பாலம் ஆகியவற்றை 6-ந் தேதிக்குள் பயங்கரவாதிகள் குண்டு வைத்து தகர்க்கும் அபாயம் இருப்பதாக போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பயங்கரவாதிகள், அவர்களின் மறைவிடங்கள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் இதர போர்த்தளவாட பொருட்களை தேடி, இலங்கை ராணுவமும், அதன் துணை அமைப்புகளும் நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன. இதற்கு போலீசாரும் உதவி வருகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #srilankablasts #EasterAttack