செய்திகள்

இலங்கை பாராளுமன்றத்தை தற்காலிகமாக முடக்கி அதிபர் சிறிசேனா உத்தரவு

இலங்கையில் பிரதமர் பதவி மாற்றம் தொடர்பான பனிப்போர் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் பாராளுமன்றத்தை தற்காலிகமாக முடக்கி அதிபர் சிறிசேனா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். #MaithripalaSirisena #RanilWickremesinghe #MahindaRajapakse

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது செல்லாது. நாட்டின் பிரதமராக நான் தொடர்ந்து நீடிக்கிறேன் என  விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்காக அவசரமாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு விக்கிரமசிங்கே கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில், நவம்பர் 16-ம் தேதிவரை பாராளுமன்றத்தை முடக்கம் செய்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை தொடர்ந்து இலங்கை அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.   #MaithripalaSirisena  #RanilWickremesinghe #MahindaRajapakse