இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 
செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிமுகம் - இலங்கையில் மீண்டும் மகிந்தா ராஜபக்சே பிரதமர் ஆகிறார்

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமர் ஆவது உறுதியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலை மலர்

கொழும்பு:

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் இரு முறை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல், கடைசியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 225 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 196 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மீதி 29 இடங்கள், கட்சிகள் பெறுகிற வாக்குகளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலில் 20 அரசியல் கட்சிகளும், 34 சுதந்திர குழுக்களும் களம் இறங்கின. மொத்தம் 7,200-க்கும் அதிகமான வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொறுப்பினை, 1 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் பெற்றிருந்தனர். கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியிலும், 70 சதவீதத்துக்கும் சற்று அதிகமான வாக்குகள் பதிவானதாக தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்தா தேசப்பிரியா அறிவித்தார்.

பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி நேற்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடங்கி நடந்தது. இதில் ஆரம்பத்தில் இருந்தே அதிபர் கோத்தபய ராஜபக்சேயின் குடும்ப கட்சியான எஸ்.எல்.பி.பி., முன்னணி பெறத்தொடங்கியது. அவரது கட்சி வெற்றி முகத்தில் உள்ளது. எனவே அங்கு மகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமர் ஆவது உறுதியாகி விட்டது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி பெரும் சரிவை சந்தித்துள்ளது.