செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டால் இலங்கை வெளியுறவு மந்திரி ரவி கருணநாயகே ராஜினாமா

இலங்கை நிதிமந்திரியாக பதவி வகித்த போது ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வெளியுறவு மந்திரியாக உள்ள ரவி கருணநாயகே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கொழும்பு:

இலங்கையில் மைத்திரிபால சிறிசேனா தலைமையில் உள்ள அரசின் கீழ் வெளியுறவு மந்திரியாக ரவி கருணநாயகே பணியாற்றி வருகிறார். முன்னதாக, இவர் நிதி மந்திரியாக பணியாற்றிய போது, அந்நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கியின் கடன் பத்திர வெளியீட்டில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்பேரில் ரவி கருணநாயகே உள்பட பல முக்கிய பிரமுகர்கள் சந்தேக வளையத்தில் சிக்கியுள்ளனர். இதனையடுத்து, ரவி கருணநாயகே, மந்திரி பதவியை ராஜினாமா செய்யும்படி தொடர்ந்து பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், தனது அரசியல் வாழ்வுக்கு, மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் இத்தகைய மோசடியை செய்துவிட்டதாகவும் கூறி ரவி கருணநாயகே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த அறிவிப்பை இன்று வெளியிட்ட அவர் நான் ஒருபோதும் தவறு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.