செய்திகள்

கேரளாவுக்கு நிவாரணம் அனுப்ப அதிவிரைவுப்படை வீரர்களின் குடும்பத்தினர் ஆர்வம்

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் பணியில் கோவை அதிவிரைவுப்படை வீரர்களின் குடும்பத்தினர் ஆர்வமாக உள்ளனர். #KeralaFloods #KeralaReliefFund

மாலை மலர்

கோவை போத்தனூர் அருகே வெள்ளலூர் மகாலிங்கபுரத்தில் மத்திய ரிசர்வ் படைக்கு உட்பட்ட அதிவிரைவுப் படை முகாம் அலுவலகம் உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 1200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கேரளாவில் கன மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1 வாரத்துக்கும் மேலாக வீரர்கள் அங்கேயே தங்கி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முகாமில் உள்ள வீரர்களின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து குழு அமைத்து நிவாரண பொருட்களை சேகரித்து, வெள்ளம் பாதித்த கேரள பகுதிகளுக்கு அனுப்பும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

கோவையின் பல்வேறு இடங்களில் இருந்தும், தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்தும் அரிசி, பருப்பு, நைட்டி, லுங்கி உள்ளிட்ட துணிமணிகள், நாப்கின், மெழுகுவர்த்தி உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களை சேகரிக்கின்றனர்.

மேலும் கோவையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இருந்து மருந்து, மாத்திரைகளை பெற்று தேவையானவர்களுக்கு அனுப்புகின்றனர். அதோடு மீட்பு பணிக்காக கோவையில் உள்ள ஆஸ்பத்திரிகளின் ஆம்புலன்சுகளை உதவிக்கு கேட்டு பெற்றுள்ளனர்.