சென்னை:
சட்டசபையில் இன்று பொன்முடி (தி.மு.க.) ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசியதாவது:-
தமிழகத்தில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இன்று அவர்கள் ஒரு குழப்பமான நிலையில் ஜாக்டோ, ஜியோ இரு தரப்பினரும், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இணைந்து போராட்டத்தை அறிவித்து உள்ளனர். காரணம், மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசு சம்பளம் வழங்க வேண்டும் என்று இதற்கு முன்பு நான் ஆசிரியராக இருந்த போது போராடினேன்.
கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது மத்திய அரசுக்கு இணையான சம்பளத்தை வழங்கினார். இப்போது 7-வது ஊதிய குழு ஒரு பரிந்துரையை....
சபாநாயகர்:- (இடை மறித்து) நீங்கள் விரிவாக பேச நேரம் இல்லை, போதும். அமைச்சர் பதில் சொல்வார்.
(அப்போது பொன்முடி மீண்டும் பேச்சை தொடர முயன்றார். அவருக்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதனால் பொன்முடி சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்)
சபாநாயகர்:- நீங்கள் என்னை மிரட்டுவது போல் பேசுவதை ஒப்புக் கொள்ள மாட்டேன். நியாயமாக கேட்டால் அனுமதி தருவேன். ஆனால் என்னை ஏன் நீங்கள் மிரட்டுகிறீர்கள். எனவே பேச வாய்ப்பு தர மாட்டேன். நீங்கள் பேசியது போதும்.
பொன்முடி:- நான் சீக்கிரம் பேசி முடித்த விடுவேன். அனுமதி தாருங்கள்.
சபாநாயகர்:- நீங்கள் இதற்கு மேல் எதுவும் பேச வேண்டாம். நாளை பார்க்கலாம். கட்டாயப்படுத்தினால் உறுதியாக நடவடிக்கை எடுப்பேன்.
அமைச்சர் ஜெயக்குமார்:- 7-வது ஊதிய குழு பரிந்துரையை அமல் படுத்துவதற்கு முதல்- அமைச்சர் ஒரு குழுவை அமைத்துள்ளார். அந்த குழுவின் தலைவராக கூடுதல் தலைமை செயலாளர் உள்ளார். அரசின் பல்வேறு சங்கங்கள் அந்த குழுவில் கருத்துக்களை தெரிவித்துள்ளது. அந்தக் குழு தனதுஅறிக்கையை அளிக்க இன்னும் 3 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளதால் குழுவின் அறிக்கை கிடைத்ததும் அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.