போபால்:
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கமல் நாத், ஜோதிராதித்ய சிந்தியா இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கருத்து மோதல் தற்போது ஆட்சியை கவிழ்க்கும் வகையில் பூதாகரமாக உருவெடுத்துள்ளது.
இதற்கிடையே, ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்பட 22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். அவர்கள் ஆளுநருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளனர். 22 பேர் ஒட்டுமொத்தமாக விலகியதால் அங்கு காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
228 இடங்களை கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில் 22 பேர் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரசின் பலம் 121ல் இருந்து 99 ஆக குறைந்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஆட்சியமைக்க 105 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால், காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் ராஜினாமா செய்த 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என அம்மாநில சபாநாயகர் பிரஜாபதி உத்தரவிட்டு உள்ளார். இதுதொடர்பாக 22 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.