செய்திகள்

சபாநாயகர் தனபால் நலமுடன் இருக்கிறார்: சட்ட சபையில் துணை சபாநாயகர் தகவல்

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சபாநாயகர் தனபால் நலமுடன் இருப்பதாகவும், நாளை சபைக்கு வந்து வழக்கமான பணிகளை மேற்கொள்வார் எனவும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழக சட்டசபை சபாநாயகராக இருக்கும் தனபால், இன்று காலை உயர்ரத்த அழுத்தம் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் மருத்துவமனைக்குச் சென்று தனபாலிடம் நலம் விசாரித்தார்.

சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால், துணை சபாநாயகர் இன்று அவையை வழி நடத்தினார்.

இந்நிலையில், தி.மு.க. துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து சபா நாயகர் தனபால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பது குறித்து அவையில் கேள்வி எழுப்பினார். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ள சபாநாயகர் எப்படி இருக்கிறார்?. அவரது உடல்நிலை குறித்து அறிய விரும்புகிறேன்? என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், “சபாநாயகர் நன்றாக இருக்கிறார். இன்று மருத்துவமனையில் இருந்து திரும்புவார். நாளை முதல் சபைக்கு வருவார்” என்றார்.