செய்திகள்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இன்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி வருகிறது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த மாதம் 30-ந்தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. அன்று முதல் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கேரளாவில் நிலவிவந்த வறட்சி நீங்கி நீர்நிலைகளில் தண்ணீர் பெருகி வருகிறது.

கேரளாவில் உள்ள அணைகளுக்கும் அதிகளவு தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது. அருவிக்கரை அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அந்த அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கேரளாவில் இன்னும் 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது. அதன்படி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இன்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. கொச்சியிலும் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கனமழை காரணமாக திருவனந்தபுரம் நகரின் பல இடங்கிளில் சாலையில் மரங்கள் சாய்ந்ததால் தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. தீயணைப்பு படையினர், மின்வாரிய ஊழியர்கள் மீட்பு பணிகளில் உடனுக்குடன் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கேரளாவில் வருகிற 14-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது. மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்படுகிறது.

மேலும் 12 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு அப்பால் கடலில் மீனவர்கள் மீன்பிடிக்ககூடாது என்று மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த தடையை மீனவர்கள் பின்பற்றுகிறார்களா? என்பதும் கண்காணிக்கப்படுகிறது.