செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 810 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 810 மெகா வாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளன.

மாலை மலர்

பொன்னேரி:

மீஞ்சூர் அடுத்த அத்திபட்டு புதுநகர் வட சென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகள் உள்ளன. இதில் ஐந்து அலகுகளில் 1830 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் என 630 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதல் நிலை மூன்றாம் அலகில் 210 மெகாவாட் இரண்டாவது நிலை முதல் அலகில் 600 மெகாவாட் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 810 மெகா வாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளன.

முதல்நிலை முதல் மற்றும் இரண்டு அலகில் 420 மெகாவாட் இரண்டாம் நிலை இரண்டாவது அலகில் 600 மெகாவாட் மொத்தம் 1020 மெகாவாட் மின் உற்பத்தி மட்டும் நடைபெறுகிறது.

பழுதினை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் பழுது சரி செய்யப்பட்டு அந்த அலகில் உற்பத்தி தொடங்கப்படும் என அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.