சென்னை:
தென்சென்னை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டி வருகிறார். கூட்டணி கட்சி தலைவர்களும் அவருக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
பெசன்ட் நகர் பகுதியில் வேட்பாளர் ஜெயவர்தன் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். அவருக்கு அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பிரசாரத்தின்போது வேட்பாளர் ஜெயவர்த்தன் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்து கூறி, ஆதரவு திரட்டினார்.
பிரசாரத்தின்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், மக்கள் தெளிவாக உள்ளதால் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி புறக்கணிக்கப்படுவது உறுதி. தி.மு.க. வேட்பாளர் ஊழல் பணத்தை பட்டுவாடா செய்து ஜெயித்து விடலாம் என்று கனவு காணுகிறார். அவரது கனவு பகல் கனவாகபோவது உறுதி என்று கூறினார்.
அவருடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, முன்னாள் எம்.எல்.ஏ. அசோக், ராஜேந்திர பாபு, கண்ணன், வட்ட செயலாளர்கள் ஆறுமுகம், இமாம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க. வடிவேல், தே.மு.தி.க. பிரபாகரன், பா.ஜ.க. டால்பின் ஸ்ரீதர், த.மா.கா. கொட்டிவாக்கம் முருகன், சமத்துவ மக்கள் கட்சி பாலகிருஷ்ணன், புதிய நீதி கட்சி ரமேஷ், புரட்சிபாரதம் ஆதிவேந்தன் மற்றும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். #LokSabhaElecltions2019