செய்திகள்

ஊழல் வழக்கில் தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் கோர்ட்டில் ஆஜரானார்

ஆயுதபேர ஊழலின் மூலம் 250 கோடி டாலர்கள் அளவுக்கு பண ஆதாயம் அடைந்த ஊழல் வழக்கில் தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா இன்று டர்பன் ஐகோர்ட்டில் ஆஜரானார்.

மாலை மலர்

ஜோகனஸ்பர்க்:

தென் ஆப்பிரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஜூமா (75). கடந்த 2009-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். இவர்மீது பல ஊழல் புகார்கள் உள்ளன. தென் ஆப்பிரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் அவர்மீது வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவர் மீதான 78 ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தது. சமீபத்தில் இந்தியரான குப்தா குடும்பத்துடன் இணைந்து ஜேக்கப் ஜூமா ஊழல் செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. அதை இருவரும் மறுத்திருந்தனர்.

இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தவிக்கும் ஜூமாவுக்கு ஆளும் ‘ஏ.என்.சி’ கட்சி எம்.பி.க்களும் எதிராக இருந்தனர். பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கட்சியில் குரல் எழுந்தது.

ஆனால், அதற்கு முன்னதாக அதிபர் பதவியை ஜூமா ராஜினாமா செய்ய கட்சித்தலைமை வலியுறுத்தியது. முதலில் மறுத்த ஜூமா பின்னர் வேறு வழியின்றி பதவி விலகினார்.

இந்நிலையில், ஊழல் வழக்கு தொடர்பாக டர்பன் நகரில் உள்ள ஐகோர்ட்டில் ஜேக்கப் ஜூமா இன்று ஆஜரானார். கோர்ட்டின் வெளியே குவிந்திருந்த தொண்டர்களை பார்த்து அவர் மகிழ்ச்சியுடன் கையை அசைத்த காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

இந்த வழக்கின் மறுவிசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.