செய்திகள்

தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜூமா ஊழல் குறித்து இந்தியாவில் விசாரணை

தென்ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா ஊழலில் கொள்ளையடித்த பணத்தை இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மூலம் பதுக்கி இருக்கலாம் என்பதால் இந்தியாவில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். #JacobZuma

மாலை மலர்

தென்ஆப்பிரிக்க நாட்டில் ஆப்பிரிக்க காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இதன் அதிபராக ஜேக்கப் ஜூமா இருந்து வந்தார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதையடுத்து அவரை பதவி விலகும்படி ஆப்பிரிக்க காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டது. ஆனால் அவர் பதவி விலக மறுத்தார். எனவே அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஆப்பிரிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இதனால் அதிபர் பதவியில் இருந்து ஜேக்கப் ஜூமா ராஜினாமா செய்தார்.

இதன்பிறகு அவர் மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அவர் ஊழல் செய்த பணத்தை இந்தியா, சீனா, துபாய் உள்ளிட்ட இடங்களில் முதலீடு செய்திருப்பதாக கருதப்படுகிறது.

எனவே இதுசம்பந்தமாக இந்தியா, சீனா, தூபாய் மற்றும் பல்வேறு நாடுகளில் விசாரிக்கப்பட்டு வருவதாக தென்ஆப்பிரிக்க போலீஸ் மந்திரி பிக்கிலி மபுல்லா கூறியுள்ளார்.


தென்ஆப்பிரிக்காவில் இந்தியாவை சேர்ந்த அஜய்குப்தா மிகப்பெரிய தொழில் அதிபராக உள்ளார். அவர் அதிபர் ஜேக்கப் ஜூமாவின் நெருங்கிய நண்பராகவும் இருந்து வந்தார். இதன் காரணமாக அஜய்குப்தாவின் குடும்பத்தினர் ஆட்சியிலும் தலையிட்டதாக புகார் கூறப்பட்டது.