பாட்னா:
பீகாரில் மெகா கூட்டணியில் பிளவு ஏற்பட்டதும் மாநில காங்கிரசில் கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. கட்சியில் ஒரு பிரிவினர் முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு சாதகமாக செயல்படுவதாக காங்கிரஸ் மேலிடத்துக்கு புகார் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அசோக் சவுத்ரி அதிரடியாக நீக்கப்பட்டார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
அசோக் சவுத்ரிக்கு பதிலாக பீகார் மாநில புதிய காங்கிரஸ் தலைவராக கவுகாப் காதிரி நியமிக்கப்பட்டார்.
சோனியாகாந்தியின் இந்த முடிவுக்கு பீகார் மாநில காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 27 எம்.எல்.ஏ.க் களில் 26 பேர் அசோக் சவுத்ரி நீக்கத்துக்கு எதிராக உள்ளனர்.
புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கவுகாப்பை வரவேற்கும் நிகழ்ச்சியில் இந்த 26 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். சித்தார்த் என்ற ஒரே ஒரு எம்.எல்.ஏ. மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் மூலம் பீகார் மாநில காங்கிரசில் மிகவும் மோசமான கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளது.