கொலை 
செய்திகள்

உசிலம்பட்டி அருகே தாயை வெட்டிக்கொன்ற மகன்

குடும்ப தகராறில் தாயை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மதுரை:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் மாயக் கண்ணன்.

கடந்த சில மாதங்களாக செல்விக்கும், மாயக்கண்ணனுக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இன்று காலையும் தாய், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மாயக்கண்ணன், பெற்ற தாய் என்றும் பாராமல், வீட்டில் இருந்த அரிவாள் மனையை எடுத்து சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவலறிந்த உசிலம்பட்டி டி.எஸ்.பி ராஜா, இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயக்கண்ணனை கைது செய்தனர். குடும்ப பிரச்சினையில் தாயை, மகன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.