செய்திகள்

14-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்து அசத்திய ஜூனியர் டிராவிட்

14-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் சதம் அடித்து அசத்தினார். #RahulDravidson #Samit #BabyWall

மாலை மலர்

பெங்களூரு:

கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கிடையேயான 14-வயதுக்குட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று நடைபெற்ற போட்டியில் விவேகானந்தா பள்ளியும், மல்லையா அதிதி சர்வதேச பள்ளியும் மோதின. இதில் மல்லையா அதிதி சர்வதேச பள்ளி அணியில் முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர்களான ராகுல் டிராவிட் மகன் சமித்(12)தும், சுனில் ஜோஷியின் மகன் ஆர்யன் ஜோஷியும் இடம்பெற்றிருந்தனர்.

ராகுல் டிராவிட் தற்போது 19-வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். சுனில் ஜோஷி, வங்காளதேச அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

முதலில் பேட்டிங் செய்த மல்லையா அதிதி சர்வதேச பள்ளி அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 500 ரன்கள் எடுத்தது. ராகுல் டிராவிட்டின் மகன் சமித் அதிரடியாக விளையாடி 150 ரன்கள் எடுத்து அசத்தினார். அதே சமயம் மற்றொரு சக அணி வீரரான சுனில் ஜோஷியின் மகன் ஆர்யன் ஜோஷி அடித்த 154 ரன்களே அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.

தொடர்ந்து விளையாடிய விவேகானந்தா பள்ளி அணி எதிரணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் மல்லையா அதிதி சர்வதேச பள்ளி அணி, 412 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

சமித் இதற்கு முன்னரே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த 14-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியிலும் அவர் 125 ரன்கள் அடித்துள்ளார். மேலும், 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற 12-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் மூன்று அரைசதம் (77*, 93, 77) அடித்து அசத்தினார். அப்போது அவருக்கு 9 வயது தான் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #RahulDravidson #Samit #BabyWall #tamilnews