செய்திகள்

ஐ.ஏ.எஸ். அதிகாரி மகளை பின்தொடர்ந்த அரியானா மாநில பா.ஜனதா தலைவர் மகன் கைது

ஐ.ஏ.எஸ். அதிகாரி மகளை பின்தொடர்ந்த அரியானா மாநில பா.ஜனதா தலைவர் மகன் மற்றும் அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

சண்டிகர்:

அரியானா மாநில பா.ஜனதா தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா. இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பரான ஆஷிஷ் குமார் என்பவருடன் சேர்ந்து பெண் ஒருவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகளான அந்த பெண், இது குறித்து போலீசில் புகார் செய்தார்.

அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம், பிரிவு 354 டி (பின்தொடர்தல்) மற்றும் மோட்டார் வாகன சட்டம், பிரிவு 185 (மது அருந்திவிட்டு ஓட்டுதல் அல்லது போதையில் ஓட்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும் அவர்கள் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சண்டிகர் மாஜிஸ்திரேட்டு முன் வாக்குமூலம் அளிக்குமாறு அந்த பெண்ணை போலீசார் கேட்டுக்கொண்டனர். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது மேலும் பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.