செய்திகள்

தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் - வானிலை மையம் அறிவிப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது

மாலை மலர்

சென்னை:

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் தீவிரம் அடையவில்லை. மாறாக கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியிலும் மற்றும் திருப்புவனம், விருதுநகர் ஆகிய இடங்களில் கனமழை பெய்துள்ளது. இன்றைய (திங்கட்கிழமை) வானிலை நிலவரம் குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் சில இடங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும் என்றனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

ஆலங்குடி 12 செ.மீ., புதுக்கோட்டை 11 செ.மீ., திருப்புவனம், விருதுநகர் தலா 10 செ.மீ., கீரனூர், திருத்துறைப்பூண்டி தலா 8 செ.மீ., திருச்சி, திருமயம் தலா 7 செ.மீ., திருப்பத்தூர், திருச்சி விமானநிலையம் தலா 5 செ.மீ., மதுரை தெற்கு, கரம்பக்குடி, சிவகங்கை, அரிமளம், மதுக்கூர் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பதிவாகி உள்ளது.