மொகடிஷு:
சோமாலியா நாட்டில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்தும் வருகின்றனர். இவர்களை ஒழிக்கும் பணியில் ராணுவம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ராணுவத்துக்கு உதவியாக அமெரிக்காவை சேர்ந்த அதிரடிப் படையினரும் இந்த தாக்குதலில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், சோமாலியாவின் தென்பகுதியில் மத்திய ஜுபா அருகேயுள்ள ஜிலிப் நகரில் இன்று சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலில் அல் ஷபாப் இயக்கத்தை சேர்ந்த 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு சொந்தமான முகாமை ராணுவ சிறப்பு படையினர் சுற்றிவளைத்து தாக்கியதாகவும், இதில் சிரியா, லிபியா ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த இரு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது. #Somaliakills #alShabab #Somaliamilitants