கோப்புப்படம் 
செய்திகள்

காஷ்மீரில் இன்று பாகிஸ்தான் படைகள் தாக்குதலில் இந்திய வீரர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் இன்று பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

மாலை மலர்

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் இன்று பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.

இந்த ஆண்டில் ஜனவரி மாதம் தொடங்கி காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் சுமார் 650 முறை அத்துமீறலாக தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காட்டி எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று காலை சுமார் 7 மணியளவில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் ஆவேசமாக தாக்குதல் நடத்தினர்.

இந்திய வீரர்களும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையில் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த இரு உயரதிகாரிகளும் மூன்று வீரர்களும் காயமடைந்தனர் என முன்னர் தகவல் வெளியானது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய வீரர் சுபம் சூரியகாந்த்(20) என்பவர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார். பலியான சுபம் சூரியகாந்த் மகாராஷ்டிரா மாநிலம், பர்பானி மாவட்டம், சட்டோரி தாலுகாவுக்கு உட்பட்ட கோனேர்வாடி கிராமத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. #tamilnews