5 பேர் உடல்களை சமூகசேவகரான மணிமாறன் அடக்கம் செய்தார் 
செய்திகள்

வேலூரில் 5 அனாதை பிணங்களை அடக்கம் செய்த சமூகசேவகர்

வேலூர் அரசு மருத்துவமனையில் யாரும் உரிமை கோராமல் பல மாதங்களாக பிணவறையில் இருந்த ஒரு மூதாட்டி பிணம் மற்றும் 4 முதியவர்களின் அனாதை பிணங்களை சமூகசேவகரான மணிமாறன் அடக்கம் செய்தார்.

மாலை மலர்

வேலூர்:

திருவண்ணாமலையை சேர்ந்தவர் மணிமாறன். சமூகசேவகரான இவர் கைவிடப்பட்ட முதியவர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளார். மேலும், அரசு மருத்துவமனைகளில் பல மாதங்களாக யாரும் வாங்கிச் செல்லாமல் இருக்கும் அனாதை பிணங்களை இவர் வாங்கி முறையாக இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் யாரும் உரிமை கோராமல் பல மாதங்களாக பிணவறையில் இருந்த ஒரு மூதாட்டி பிணம் மற்றும் 4 முதியவர்களின் அனாதை பிணங்களை இவர் அடக்கம் செய்ய முன்வந்தார். அதன்படி மணிமாறன் வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் அனுமதி பெற்று பின்னர், மருத்துவமனையில் இருந்து 5 பிணங்களையும் பெற்று முத்துமண்டபம் பாலாற்றங்கரை இடுகாட்டில் இறுதி சடங்குகள் செய்து நேற்று அடக்கம் செய்தார்.

இவரின் இந்த சேவைக்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.