செய்திகள்

தமிழக எம்பி, எம்எல்ஏக்கள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் - சமூக வலை தளங்களில் பரவும் தகவல்

தமிழக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்ற தகவல் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மாலை மலர்

சென்னை:

தமிழகத்தில் காவிரி பிரச்சினைக்காக கடந்த 2 வாரங்களாக நடந்த போராட்டம் இப்போது தான் ஓரளவு முடிவுக்கு வந்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக பஸ்- ரெயில் மறியல் போராட்டங்களும் நடந்தன. உச்சக்கட்ட போராட்டமாக ஐ.பி.எல். எதிர்ப்பு போராட்டம் அமைந்திருந்தது. பிரதமர் மோடி சென்னை வந்த போது கருப்பு கொடி காட்டியும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு மே 4-ந்தேதிக்குள் தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மறுநாள் (5-ந்தேதி) அவர்களது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்ற தகவல் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி ராஜினிமா செய்யாவிட்டால் அவர்களது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். அப்போது போலீசார் தடியடி நடத்தினாலோ அல்லது அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலோ, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்படும்.

இங்கே சோறும், தண்ணீரும் இல்லாமல் விவசாயிகள் சாகும் போது தண்ணீரை கூட வாங்கி கொடுக்க முடியாத உங்களுக்கு லட்சங்களில் சம்பளம் எதற்கு? உண்மையான தமிழன் கண்டிப்பாக இதனை ஷேர் செய்வான்.

இவ்வாறு அந்த தகவல் பரப்பப்பட்டு வருகிறது. #tamilnews