குளிர்பான டப்பாவுக்குள் தலையை விட்டு எடுக்க முடியாமல் தவித்த நல்லபாம்பு 
செய்திகள்

குளிர்பான டப்பாவுக்குள் தலையை விட்டு எடுக்க முடியாமல் தவித்த நல்லபாம்பு

குளிர்பான டப்பாவுக்குள் சிக்கிய தலையை வெளியே எடுக்க முடியாமல் தவித்த பாம்பை வனவிலங்கு பாதுகாப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

திருவனந்தபுரம் :

அறியா வயதில் சில சிறுவர்கள் பானை, சட்டிக்குள் தலையை விட்டு அதை எடுக்க முடியாமல் தவிப்பது உண்டு. இதற்கு பாம்பும் விதிவிலக்கல்ல போலும். கேரள மாநிலம் ஆலப்புழை அடுத்துள்ள வலபாடுபீச் மாலாவளவு பகுதியில் வசித்து வருபவர் லைலா. இவரது வீட்டின் அருகே ஒரு நல்ல பாம்பு வந்தது. அப்போது அந்த பாம்பின் கண்களில் அங்கு வீசப்பட்டு கிடந்த ஒரு காலி குளிர்பான டப்பா தெரிந்தது. எனவே குளிர்பான டப்பாவுக்குள் ஏதேனும் உணவு கிடைக்கும் என்ற நப்பாசையில் அதன் உள்ளே பாம்பு தலையை விட்டது. ஆனால் அதற்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. பின்னர் அந்த பாம்பு குளிர்பான டப்பாவுக்குள் சிக்கிய தலையை வெளியே எடுக்க முடியாமல் தவித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் அங்கு கூடிவிட்டனர். அப்போது மரணபயத்தில் பாம்பு அங்குமிங்கும் ஊர்ந்து சென்றது. மேலும் அதன் சீற்றம் அதிகம் இருந்தது. அதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனவிலங்கு பாதுகாப்பு துறையினர் விரைந்து வந்து டப்பாவுக்குள் சிக்கிய நல்லபாம்பின் தலையை லாவகமாக வெளியே எடுத்து அதை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

SCROLL FOR NEXT