கோப்பு படம் 
செய்திகள்

அவினாசி அருகே பூட்டை உடைத்து மது பாட்டில்கள் கடத்தல்

அவினாசி அருகே கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,

மாலை மலர்

அவினாசி:

திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் சிலர் சாராயம் காய்ச்சி விற்று வருகின்றனர். அவர்களை போலீசார் பிடித்து கைது செய்து வருகின்றனர்.

அவினாசி கால்நடை ஆஸ்பத்திரி அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக இந்த கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒருவர் கடையை திறந்து மதுபாட்டில்களை காரில் கடத்தி செல்வதாக அவினாசி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சர்வேஸ்வரன் தலைமையிலான போலீசார் மற்றும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் லூர்துசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது கடையில் இருந்த 700 மது பாட்டில்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவினாசி மங்கலம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையிலும் சீலை அகற்றி மதுபாட்டில்கள் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.