மெட்ரோ ரெயில் (கோப்புப்படம்) 
செய்திகள்

டிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி

மெட்ரோ ரெயில் பயணத்துக்கு நவீன ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை மெட்ரோ நிர்வாகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ரூ.1,000 செலுத்தி பெற்றுக்கொண்டு எளிதில் பயணம் செய்யலாம்.

மாலை மலர்

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் வரை பயணிகள் சேவை நடந்து வருகிறது. தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பயணிகள் வசதிக்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் புதிய ‘ஸ்மார்ட்’ கைக்கடிகாரத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

‘டைட்டன்’ வாட்ச் நிறுவனம் புதிய ‘சிப்’ பொருத்திய கைக்கடிகாரத்தை தயாரிக்கிறது. இதன் மூலம் பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் எளிதில் செல்ல முடியும்.

நுழைவு பாதையில் உள்ள மிஷினில் கைக்கடிகாரத்தை காண்பித்தால் தானாக கதவு திறக்கும். எளிதில் உள்ளே செல்ல முடியும். டிக்கெட் எடுக்க காத்திருக்க தேவையில்லை. ரூ. 1,000 செலுத்தி கைக்கடிகாரத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக விரைவில் ‘ஸ்மார்ட் வாட்ச்’ அறிமுகம் செய்யப்படும். ‘டைட்டன்’ நிறுவனம் நவீன ‘சிப்’ பொருத்திய இந்த கைக்கடிகாரத்தை தயாரித்து வழங்க உள்ளது.

மெட்ரோ நிலையத்தில் ரூ. 1,000 செலுத்தி பயணிகள் இந்த கைக்கடிகாரத்தை பெற்றுக் கொள்ளளாம்.