தர்மபுரி:
கோடை வெயில் தற்போது வாட்டி வதைக்கிறது. இதனால் தர்மபுரி நகரமே கடும் வெப்பத்தால் சுட்டெரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஆங்காங்கே பொது மக்கள் வீடுகளிலே முடங்கி கிடக்கின்றனர். சிலர் வெப்பத்தை தணிக்க குளிர்ச்சியாக இருக்கக்கூடிய சுற்றுலா தளத்தை தேடிச் செல்கின்றனர்.
இந்நிலையில் தர்மபுரியில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் மழை பெய்வது வழக்கமாகியுள்ளது. அவ்வவ்போது இவ்வாறு மழை பெய்வதால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை காப்பாற்றி கொள்கின்றனர். இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் தர்மபுரி நகரமே அரண்டுபோகும் அளவில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், பலத்த மழையின் காரணமாக நகரின் பெரும்பாலான முக்கிய பகுதிகள் நிலை குலைந்து விட்டன.
அப்பாவு நகரமே அரண்டுபோகும் அளவில் நேற்று பெய்த மழையினால் சாலையோர மரங்கள் பல வீடுகளின் மேல் சரிந்து விழுந்துள்ளன. இதனால் பெரும்பாலானோர் வீட்டின் கீழ் தளத்தில் இருந்ததால் பெரும் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன. சில மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தது. மரத்தின் கிளைகள் முறிந்து சாலையின் நடுவழியில் செங்குத்தாக நின்றபடியாகவும் காணப்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் பெய்த மழைக்கு பின்னர் அப்பாவுநகர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதனை பெரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
மேலும், இதுபோன்று இன்றும் பலத்த காற்றுடன் மழைவரும் என முன் எச்சரிக்கையாக பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். #Tamilnews