செய்திகள்

அமெரிக்காவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி 6 பேர் பலி

அமெரிக்காவில் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். #PlaneCrash

வாஷிங்டன்:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மேற்கு ஹூஸ்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

விமானத்தை அதன் உரிமையாளரும், விமானியுமான ஜெப்ரே வெயிஸ் (வயது 65) இயக்கினார். அவருடன் இந்த விமானத்தில் 5 பேர் பயணம் செய்தனர்.

இந்த விமானம் கெர்வில்லே நகரில் உள்ள விமானநிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் அந்த விமானம் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பண்ணை நிலத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த கோரவிபத்தில் ஜெப்ரே வெயிஸ் உள்பட விமானத்தில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.  #PlaneCrash 

SCROLL FOR NEXT