பெங்களூரு:
பெங்களூரு பானசாவடி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் சிறுநீரகம் விற்பனை செய்யப்படுவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவமனையின் இயக்குனர் சபீக் என்பவர் பானசாவடி போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் 30-ந் தேதி புகார் அளித்திருந்தார்.
அதில் தங்களது மருத்துவமனையின் பெயரை பயன்படுத்தி சிறுநீரக மோசடியில் ஒரு கும்பல் ஈடுபடுவதாகவும், அந்த கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் கூறி இருந்தார்.
அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் அந்த கும்பலை பிடிக்க பானசாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தனியார் மருத்துவமனை சார்பில் சிறுநீரகம் பெற்று தருவதாகக்கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலித்து மோசடி செய்த 6 பேரை பானசாவடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கைதானவர்கள் நைஜீரியா நாட்டை சேர்ந்த எஸ்னி லவ்லி (வயது 29), சூடான் நாட்டை சேர்ந்த முகமது அகமது இஸ்மாயில்(24), மார்வன்(27), திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஹிரேந்திரா (25), கேமி ரஞ்சன்(21), ஜடின்குமார்(25) ஆகியோர் என்பதும், இவர்கள் பெங்களூரு பொம்மன ஹள்ளி, பன்னரகட்டா, கம்மனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
இவர்கள் 6 பேரும் தனியார் மருத்துவமனையின் பெயரில் இணையதளத்தில் சிறுநீரகம் விற்பனை செய்யப்பட இருப்பதாகவும், சிறுநீரகத்தை வாங்கி கொள்ள இருப்பதாகவும் விளம்பரம் செய்திருந்தனர். அந்த இணையதள விளம்பரத்தில் செல்போன் எண்ணையும் பதிவிட்டு இருந்தனர்.
மேலும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சிலரிடம் பணம் கொடுத்து, அவர்களது வங்கி கணக்கு, ஏ.டி.எம். கார்டு, சிம்கார்டுகள் உள்ளிட்டவற்றை வாங்கி உள்ளனர்.
அதன்பிறகு, சிறுநீரகம் விற்பனை செய்ய இருப்பவர்கள், வாங்க தயாராக இருப்பவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினால், அவர்களிடம் திரிபுராவை சேர்ந்தவர்களின் வங்கி கணக்குக்கு முன்கூட்டியே ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1½ லட்சம் வரை செலுத்தும்படியும், அதன்பிறகு சிறுநீரகத்தை வாங்கி கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய பலர் பணத்தை டெபாசிட் செய்து வந்துள்ளனர். அவ்வாறு பணம் டெபாசிட் செய்யப்பட்டதும், உடனடியாக அதனை எடுத்து விடுவார்கள். அதே நேரத்தில் சிறுநீரகம் வேண்டும் என்று பணம் கொடுத்தவர்களிடம், சிறுநீரகம் கொடுக்காமலும், வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமலும் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
இதுபோல, சிறுநீரகத்தை விற்பனை செய்ய தயாராக இருக்கும் ஏழைகளிடம் அதிக பணம் பெற்று தருவதாக கூறி, அவர்களிடம் முன்பணம் பெற்று திரும்ப கொடுக்காமல் மோசடி செய்திருந்ததும் தெரியவந்தது. இதுவரை 260 பேரிடம் இருந்து பணம் வசூலித்து 6 பேரும் மோசடியில் ஈடுபட்டு இருந்தனர்.
அத்துடன் சில வசதி படைத்தவர்களுக்கு சிறுநீரகம் கொடுப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் வரை பெற்று 6 பேரும் மோசடி செய்திருந்தனர். இவ்வாறு கிடைக்கும் பணத்தை 6 பேரும் ஆடம்பரமாக செலவு செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி சம்பவத்தில் நைஜீரியா மற்றும் சூடான் நாட்டை சேர்ந்த வாலிபர்கள் மூளையாக செயல்பட்டு இருந்தனர். கைதானவர்களிடம் இருந்து பல்வேறு வங்கிகளின் கணக்கு புத்தகங்கள், சிம்கார்டுகள், செல்போன்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களின் 8 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.
கைதான 6 பேர் மீதும் பானசாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைதான 6 பேரில் 3 பேர் நைஜீரியா மற்றும் சூடான் நாடுகளை சேர்ந்தவர்கள். இந்த 3 வாலிபர்களும் விசா முடிந்த பின்பும் கூட சட்ட விரோதமாக பெங்களூருவில் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் வெளியுறவு துறைக்கும் அந்த நாடுகளின் தூதரகங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.