கம்பாலா:
ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது உகாண்டா. செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மழைப்பொழிவு பெறுகிறது. தற்போது அங்கு பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள படேர் மாவட்டத்தின் டோபி கிராமத்தில் இறந்த ஒருவருக்கு நேற்று இரவு இறுதிச்சடங்கு நடைபெற்றது. சுமார் 20 பேர் இரவு முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று காலை மழை பெய்யத் தொடங்கியதால் அருகிலிருந்த மரத்திற்கு அடியில் அனைவரும் ஒதுங்கி நின்றனர். இடி, மின்னலுடன் மழை தீவிரமடைய தொடங்கியது. இதையடுத்து திடீரெனெ மின்னல் தாக்கியதில் அங்கிருந்த 6 பேர் பலியாகினர். 11 பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த செப்டம்பர் மாதம் உகாண்டாவின் கனுங்கு மாவட்டத்தில் 4 விவசாயிகள் மின்னல் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.