கைது 
செய்திகள்

கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.13¼ கோடி மோசடி- முன்னாள் தலைவர் உள்பட 6 பேர் கைது

வேலாண்டிபாளையம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.13¼ கோடி மோசடி நடைபெற்றது தொடர்பாக முன்னாள் தலைவர், செயலாளர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை:

கோவையை அடுத்த வேலாண்டிபாளையம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள், டெபாசிட் வைப்பது, தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவது உள்ளிட்டவற்றுக்கு கடன் சங்கத்தை அணுகுவார்கள். இந்த நிலையில் பொதுமக்கள் முதலீடு செய்த டெபாசிட் தொகையை கூட்டுறவு சங்கத்தில் வரவு வைக்காமலும், தங்க நகையை அடகு வைத்தால் பொதுமக்களிடம் ஒரு தொகையை கொடுத்து விட்டு, அதிக தொகை கடன் கொடுத்ததாகவும் கணக்கு எழுதி நீண்டநாளாக மோசடி நடைபெற்று வந்துள்ளது தெரியவந்தது.

இந்த மோசடி குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர் கோவை வணிக குற்றபுலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் ரூ.13 கோடியே 29 லட்சம் மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நிதி பெற்றும் மோசடி செய்து உள்ளனர். இது தொடர்பாக கூட்டுறவு சங்க செயலாளர் சரவணகுமார், முன்னாள் தலைவர் வரதராஜன், உதவி செயலாளர் விஷ்ணு சங்கர், எழுத்தர் அனுசுயா, தங்கநகை மதிப்பீட்டாளர் ராதாமணி மற்றும் தேவராஜ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது கூட்டுசதி, மோசடிக்கு போலி ஆவணங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட் டது. கைதான 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வேலாண்டிபாளையம் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.13¼ கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.