செய்திகள்

சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டப கட்டிட பணிகள் இன்னும் ஒருவாரத்தில் நிறைவடையும் என்றும் அதன்பிறகு திறப்பு விழா நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2.8 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்படுகிறது.

அடையாறு துர்காபாய் தேஷ்முக் சாலையில் 28,300 சதுரஅடி பரப்பளவில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.

திராவிட கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சிறு சிறு கோபுரங்கள் வடிவில் கட்டிட கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

பார்வையாளர்கள் வசதிக்காக மணிமண்டபத்தின் உள்ளே குடிநீர் வசதி மற்றும் கழிவறைகளுடன் கூடிய காம்ப்ளக்ஸ் தனியாக கட்டப்பட்டு உள்ளது. பார்வையாளர்கள் அமர இருக்கை வசதியும் செய்யப்படுகிறது.

மணிமண்டபத்தில் சிவாஜியை நினைவுபடுத்தும் வகையில் அவரது அரிய புகைப்படங்களுடன் வீடியோ காட்சிகள், குறும்படங்கள் திரையிடவும் ஏற்பாடு நடக்கிறது.


கடற்கரை சாலை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் உள்ள சிவாஜி சிலை கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டு இந்த மணி மண்டபத்தில் நிறுவப்படுகிறது.

இதற்கான பீடம் அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அரசு உத்தரவிட்டதும் சிவாஜி சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் நிறுவப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மணிமண்டபத்தில் பூச்சு வேலைகள், பெயிண்டிங் போன்ற இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.