கொலை 
செய்திகள்

அண்ணியுடன் கள்ளத்தொடர்பு- தம்பியை அடித்து கொன்ற அண்ணன் போலீசில் சரண்

நத்தம் அருகே அண்ணியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் தம்பியை அடித்து கொன்ற அண்ணன் போலீசில் சரணடைந்தார்.

வடமதுரை:

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள பிடாரப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி(23). லாரி டிரைவர்.

இவர் நத்தம் அருகில் உள்ள கம்பிளியம்பட்டியில் தனது அண்ணன் ஜெயராஜ்(35) வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

அப்போது ஜெயராஜின் மனைவி சின்னம்மாளுடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளத்தொடர்பாக மாறியது. இதை அறிந்ததும் ஜெயராஜ் தனது மனைவி மற்றும் தம்பியை அழைத்து கண்டித்தார். இதனால் சின்னம்மாள் கோவித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

தனது தம்பியால்தான் மனைவி கோவித்துகொண்டு சென்றுவிட்டார் என்ற ஆத்திரத்தில் இருந்த ஜெயராஜ் சம்பவத்தன்று பிடாரப்பட்டிக்கு சென்று பழனிச்சாமியிடம் தகராறு செய்தார். மேலும் அவரை தாக்கி அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த பழனிச்சாமி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையறிந்த போலீசார் ஜெயராஜை தீவிரமாக தேடி வந்தனர். ஜெயராஜ் நேற்று வடமதுரை போலீசில் சரணடைந்தார். இது குறித்து துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.