பலியான சிலம்பரசன், ஜெகதீஸ்வரி 
செய்திகள்

நாயை மீட்கச்சென்ற அக்காள்-தம்பி காவிரி ஆற்றில் மூழ்கி பலி

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நாயை மீட்கச்சென்ற அக்காள்-தம்பி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

மொடக்குறிச்சி:

ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடே‌ஷன் (வயது 55). இவருடைய மனைவி செல்வி (50). 2 பேரும் கட்டிட தொழிலாளிகள். இவர்களுக்கு குமரேசன் (28),சிலம்பரசன் (22) என 2 மகன்களும், சத்யா (25), ஜெகதீஸ்வரி(24), காஞ்சனா தேவி (21) என 3 மகள்களும் உள்ளனர்.

இவர்கள் 5 பேரும் நேற்று மதியம் நண்பர்கள் 6 பேருடன் மொடக்குறிச்சி அருகே காங்கேயம்பாளையத்தில் காவிரி ஆற்றின் நடுவில் உள்ள நட்டாற்றீசுவரர் கோவிலுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர்.

தங்கள் வீட்டில் வளர்த்த நாயையும் அழைத்து சென்றார்கள். கோவிலில் 11 பேரும் சாமி கும்பிட்டனர். நேற்று மாலை கோவிலுக்கு அருகே காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது ஜெகதீஸ்வரி வளர்த்து வரும் நாய் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது. இதனை கவனித்த சிலம்பரசனும், ஜெகதீஸ்வரியும் நாயை கரைக்கு தள்ளி விட்டார்கள்.

ஆனால் அவர்கள் 2 பேரும் ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கிக்கொண்டனர். இதனால் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினார்கள். இதனை கவனித்த நண்பர்கள் 2 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

சிலம்பரசனும், ஜெகதீஸ்வரியும் பிணமாகவே மீட்கப்பட்டனர். மொடக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் 2 பேரின் உடலையும் மீட்டனர்.

பின்னர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 2 பேரின் உடல்களையும் பார்த்து அவர்களுடைய சகோதரர், சகோதரிகள் மற்றும் நண்பர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

அக்காளும், தம்பியும் பலியான பகுதியில் இதுவரை 30 பேர் ஆற்றில் மூழ்கி பலியாகி இருக்கிறார்கள். இங்கு சூழல் இருப்பதால் அதில் சிக்கியவர்கள் உயிர் பிழைக்க முடியாது.

எனவேதான் கோவிலை ஒட்டி தடுப்பு அமைக்கப்பட்டு அந்த தடுப்புக்குள் நின்று மக்கள் குளிப்பார்கள். ஆனால் தற்போது அந்த தடுப்புக்கும் கீழேதான் தண்ணீர் செல்கிறது.

அந்த தண்ணீரில் இறங்கி குளிக்க சென்று ஆபத்தான இடத்துக்கு செல்வதால் இதுபோன்ற பலி ஏற்பட வாய்ப்பு உருவாகி விடுகிறது. கடந்த வருடம் கூட ஒருவர் இந்த இடத்தில் ஆற்றில் மூழ்கி பலியானார்.

எனவே அந்த பகுதியில் சுழல் இருப்பதை மக்கள் அறிந்து அங்கு அவர்கள் குளிக்க செல்லாமல் இருக்க எச்சரிக்கை பலகை வைப்பது அவசியம் என்று கோரிக்கை எழுந்துள்ளது. #tamilnews