செய்திகள்

சிறுமுகை அருகே பவானி ஆற்றில் மூழ்கி கட்டிடத் தொழிலாளி பலி

சிறுமுகை அருகே பவானி ஆற்றில் மூழ்கி கட்டிடத் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மேட்டுப்பாளையம்:

கோவை மேட்டுப்பாளையம் சிறுமுகை கணேசபுரத்தை சேர்ந்த கன்னியப்பனின் மகன் பசுபதி (வயது 21). கட்டிடத்தொழிலாளி. இவரது நண்பர் ரவி. இவர் பழத்தோட்டம் கிச்சகத்தூரில் உள்ள பவானி ஆற்றில் நேற்று மாலை குளிக்க சென்றனர்.

ஆற்றில் இறங்கியபோது தண்ணீர் குறைவாக இருந்தது. அப்போது இருவரும் குளித்து மகிழ்ந்தனர். திடீரென ஆற்றில் வெள்ளம் அதிகரித்தது. இதில் நீச்சல் தெரியாத பசுபதி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டார். ரவி கரைக்கு ஏறி உயிர் தப்பினர்.

இது குறித்து சிறுமுகை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு நேரம் என்பதால் தேடும் பணியை தொடங்க முடியவில்லை. இன்று காலை சம்பவம் நடந்த பகுதியில் இறங்கி பசுபதியை தேடினர். அப்போது 50 அடி தூரத்தில் அவர் பிணமாக கிடந்தார்.

அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.