செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவான தொடர் போராட்டத்தை கைவிட்டார் யஷ்வந்த் சின்கா

மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகளை திரட்டி மூன்று நாட்களாக போராட்டம் நடத்திய முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா தனது போராட்டத்தை இன்று முடித்து கொண்டார்.

மாலை மலர்

மும்பை:

மத்தியில் அமைந்துள்ள பா.ஜனதா கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து வருபவர், முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா(80). பா.ஜ.க.வை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் உள்ள அகோலா நகரில் பருத்தி விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தினார். அப்போது அந்த மாநில பா.ஜனதா அரசு, விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளை செயல்படுத்தி வருவதாக சாடினார்.

இந்த போராட்டத்தின்போது அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் விடுதலை செய்யப்பட்ட அவர் அகோலா நகர போலீஸ் தலைமையகத்தின் அருகாமையில் உள்ள மைதானத்தில் விவசாயிகளுடன் அமர்ந்து தனது போராட்டத்தை தொடர்ந்து வந்தார்.

இந்நிலையில், மூன்று நாட்களாக நடைபெற்ற போராட்டத்தை இன்று மாலை யஷ்வந்த் சின்கா கைவிட்டார். 

தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்பதாக உறுதி அளித்ததன்பேரில் போராட்டத்தை கைவிடுவதாக யஷ்வந்த் சின்ஹா, எந்த காரணத்தாலும் இனி நாங்கள் தற்கொலை செய்துகொள்ள மாட்டோம் என்ற உறுதிமொழியை நீங்களும் அளிக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளை அவர் கேட்டு கொண்டார்.