செய்திகள்

அமெரிக்காவில் 4 ஆண்டுகளில் 20 ஆயிரம் இந்தியர்கள் அரசியல் தஞ்சம்

சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் 4 ஆண்டுகளில் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. #20KIndians USpoliticalasylum #politicalasylum

அமெரிக்காவில் சமீபகாலமாக தஞ்சம் அடைந்துள்ள இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்பான விபரங்களை அளிக்குமாறு தகவல் பெறும் சுதந்திரம் சட்டத்தின் மூலம் அந்நாட்டின் குடியுரிமைத்துறையிடம் வட அமெரிக்காவில் உள்ள பஞ்சாபிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக தற்போது பெறப்பட்டுள்ள பதிலில் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 146 பெண்கள் உள்பட 2,306 பேர் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்தனர். 2015-ம் ஆண்டில் 96 பெண்கள் உள்பட 2,971 பேர் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்தனர்.

2016-ம் ஆண்டில் 123 பெண்கள் உள்பட 4,088 இந்தியர்கள் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்தனர். 2017-ம் ஆண்டில் 187 பெண்கள் உள்பட 3,656 இந்தியர்கள் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்தனர். இந்த பட்டியலில் மிக அதிகபட்சமாக இந்த ஆண்டில் மட்டும் ஜூலை மாதம்வரை 296 பெண்கள் உள்பட 7,214 இந்தியர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். இப்படி கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 20 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் (இந்தியா) மதரீதியாகவும், இனரீதியாகவும் அச்சுறுத்தலுக்குள்ளான மக்கள் மட்டுமே பிறநாடுகளில் அரசியல் தஞ்சம் அடைவதுண்டு. பொதுவான வன்முறை தாக்குதல் மற்றும் பிற குற்றச்செயல்களின் பாதிப்புக்குள்ளானவர்கள் இந்த தகுதிக்குள் வர மாட்டார்கள்.