செய்திகள்

48 மணிநேரத்தில் வங்க கடலில் காற்றழுத்தம் உருவாகிறது- இந்திய வானிலை மையம்

அடுத்த 48 மணிநேரத்தில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IndianMeteorologicalCenter

மாலை மலர்

சென்னை:

வடகிழக்கு பருவமழை தொடங்க தாமதம் ஆகும் நிலையில் தற்போது மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகும் நிலை காணப்படுகிறது.

இது அடுத்த 48 மணிநேரத்தில் 29-ந்தேதி வாக்கில் குறைந்த காற்றழுத்த பகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி அதையொட்டியுள்ள பகுதிகளில் பரவி தமிழக கடலோரம் வரை பரவியுள்ளது.

இது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை என்பதால் இன்னும் 4 நாளில் பருவமழைக்கான அறிகுறி தொடங்கும் என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது. பாம்பன், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆக உயரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IndianMeteorologicalCenter