பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க., ஜனதா தளம்(எஸ்) உள்ளிட்ட கட்சிகள் முயற்சித்து வருகின்றன. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர்.
சமீபத்தில், கர்நாடகாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு இந்துக்களுக்கு எதிரானது, ஊழல் நிறைந்த அரசு என கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, கர்நாடக மாநிலத்தில் மத கலவரத்தை தூண்டி விடுவதே அமித்ஷாவின் அடிப்படை நோக்கமாகும் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், பிரதமர் மோடி, பா.ஜ. தலைவர் அமித்ஷா உள்பட யார் வந்து சென்றாலும், கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதி. கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அமித்ஷா கர்நாடகத்திற்கு வருகிறார். மத கலவரத்தை தூண்டி விடுவது அவரது அடிப்படை நோக்கம்.
அமித்ஷா பேசும்போது கலவரத்தை தூண்டும் வகையிலேயே பேசுகிறார். பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார். வன்முறைக்கு வித்திடுகிறார். கர்நாடகத்தில் அமைதியை சீர்குலைக்கும் அவருடைய முயற்சியை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சட்டத்தை யார் கையில் எடுத்தாலும் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொய் சொல்வது, எங்களை குறை கூறுவதே பா.ஜ.க.வின் தொழிலாக உள்ளது என்று கூறினார். #tamilnews