செய்திகள்

குரும்பூர் அருகே கோவில் கொடை விழாவில் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

குரும்பூர் அருகே முன்விரோதத்தில் கோவில் திருவிழாவில் வியாபாரியை அரிவாள் வெட்டி விட்டு விவசாயி தப்பி ஓடினார்.

குரும்பூர்:

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள சுகந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 55). இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை பட்டாபிராம் பகுதியில் தங்கி இருந்து டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் குமாருக்கும், சுகந்தலையை சேர்ந்த விவசாயியான சின்னத்துரை மகள் செல்வி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அய்யாக்கண்ணு, சின்னத்துரை குடும்பத்தினரிடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில் அய்யாக்கண்ணு தனது சொந்த ஊரில் நடைபெறும் கோவில் கொடை விழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்தினருடன் சுகந்தலைக்கு வந்திருந்தார். கோவில் கொடை விழாவில் நின்று கொண்டிருந்த அய்யாக்கண்ணுவிடம் சின்னத்துரை வாக்குவாதம் செய்தார்.

இதில் ஏற்பட்ட தகராறில் சின்னத்துரை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அய்யாக்கண்ணுவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த அய்யாக்கண்ணுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் வழக்குப் பதிந்து சின்னத்துரையை தேடி வருகின்றனர்.