செய்திகள்

தாயாருக்கு உடல்நலக்குறைவு: இலங்கையில் இருந்து இந்தியா புறப்பட்டார் ஷிகர் தவான்

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவானின் தாயார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவரை பார்ப்பதற்காக இலங்கை தொடரில் இருந்து பாதியில் வெளியேறிய ஷிகர் தவான், இந்தியாவுக்கு புறப்பட்டார்.

மாலை மலர்

கொழும்பு:

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், ஷிகர் தவான் இன்று இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளார். இதனால் அவர் நாளைய போட்டி மற்றும் அதன்பின்னர் நடைபெற உள்ள டி20 போட்டியில் பங்கேற்க மாட்டார்.

இதுபற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தாயாரை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக ஷிகர் தவான இந்தியா புறப்பட்டுள்ளார். அவரது தாயாரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுப் பயணத்தில் ஒரு 50 ஓவர் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டி மட்டுமே உள்ளதால், ஷிகர் தவானுக்குப் பதிலாக மாற்று வீரர் யாரையும் தேர்வுக் குழு அறிவிக்கவில்லை. ஏற்கனவே கே.எல்.ராகுல், ரகானே ஆகிய இரண்டு துவக்க வீரர்கள் அணியில் உள்ளனர்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த ஷிகர் தவான, ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அதிகபட்சமாக 132 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.