செய்திகள்

சிறை தண்டனையை எதிர்த்து நவாஸ் ஷரிப் நாளை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் அப்பீல்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், அவரது மகள் மரியம் ஷரிப் சார்பில் நாளை மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படுகிறது. #Sharifconviction #graftcase

மாலை மலர்

இஸ்லாமாபாத்:

ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பிலும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நாளை அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக நவாஸ் ஷரிப்பின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, நேற்று அடிடாலா சிறைக்கு சென்ற காவாஜா ஹாரிஸ் தலைமையிலான வழக்கறிஞர்கள் முறையீட்டு மனுக்களில் தங்களது கட்சிக்காரர்களின் கையொப்பங்களை பெற்றனர்.

சிறை தண்டனையை எதிர்த்து முறையீடு செய்வதுடன், நவாஸ் ஷரிப் மீதுள்ள இதர ஊழல் வழக்குகளின் விசாரணையை அடிடாலா சிறை வளாகத்தில் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்படும் என நவாஸ் ஷரிப் ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். #Sharifconviction #graftcase