செய்திகள்

ஐக்கிய ஜனதாதளத்தில் பிளவு: தேர்தல் கமிஷனை அணுக சரத்யாதவ் அணி முடிவு

தேர்தல் கமிஷனை அணுகி நாங்களே உண்மையான ஐக்கிய ஜனதாதளம் என்று அங்கீகரிக்கும்படி உரிமையும் கோருவோம் என ஐக்கிய ஜனதாதளத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் அருண் ஸ்ரீவத்சவா கூறியுள்ளார்

புதுடெல்லி:

பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்த விவகாரத்தால் பீகாரில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதாதளத்தில் பிளவு ஏற்பட்டு உள்ளது. முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஒரு அணியினரும், மூத்த தலைவர் சரத்யாதவ் தலைமையில் இன்னொரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தை பாட்னா நகரில் கூட்டிய நிதிஷ்குமார், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு முடிவு செய்தார்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த சரத்யாதவ் அணியினரும் தங்களுடைய பலத்தை நிரூபிக்கும் விதமாக தேசிய கவுன்சில் கூட்டத்தை கூட்டுவதற்கு முடிவு செய்துள்ளனர்.

இதுபற்றி ஐக்கிய ஜனதாதளத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் அருண் ஸ்ரீவத்சவா டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், “கட்சியின் பெரும்பான்மை நிர்வாகிகள் மற்றும் பிரிவுகள் எங்களது (சரத்யாதவ்) அணியில்தான் உள்ளன. இதை நிரூபிக்க விரைவில் தேசிய கவுன்சில் கூட்டத்தை கூட்டுவோம். மேலும் தேர்தல் கமிஷனை அணுகி நாங்களே உண்மையான ஐக்கிய ஜனதாதளம் என்று அங்கீகரிக்கும்படி உரிமையும் கோருவோம்“ என்றார்.

SCROLL FOR NEXT