சரத் பவார், உமா பாரதி 
செய்திகள்

சரத் பவாரின் கருத்து ‘பகவான் ராமர்’-க்கு எதிரானது: மோடிக்கு எதிரான அல்ல- உமா பாரதி

நாம் கொரோனாவை எப்படி வீழ்த்தலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், சிலர் கோவில் கட்டினால் கொரோனா ஒழிந்துவிடும் என கருதுகிறார்கள் என்று சரத் பவார் கூறியிருந்தார்.

மாலை மலர்

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரம் நடைபெறும், பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் நடைபெற்ற அனைத்து அறக்கட்டளை உறுப்பினர்களின் முக்கிய கூட்டத்துக்கு பின்னர் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த விழா பிரதமர் மோடியின் வசதிக்கேற்ப அடுத்த மாதம் 3-ந்தேதி அல்லது 5-ந்தேதி நடைபெறும், இதற்கான அழைப்பை அவர் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், பிரதமர் மோடி அயோத்தி செல்ல இருப்பதை மறைமுகமாக தாக்கினார். இதுகுறித்து குறித்து சரத் பவார் கூறுகையில் ‘‘எது முக்கியமானது என்று நாம் கட்டாயம் முடிவு செய்ய வேண்டும். நாம் கொரோனாவிற்கு எதிராக போரில் எப்படி வெற்றி பெறலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், சிலர் கோவில் கட்டுவதால் கொரோனா ஒழிந்துவிடும் என்று கருதுகிறார்கள். அதற்கு பின் ஒரு காரணம் இருக்கலாம். கொரோனா வைரஸ் தொற்றால் முடங்கிப்போன பொருளாதாரத்தை எப்படி முன்னேற்றுவது என்பதை பார்ப்பதுதான் எங்களுடைய முன்னுரிமை. அரசு இதில்தான் கவனம் செலுத்த வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான உமா பாரதி ‘‘சரத் பவாரின் கருத்து கடவுள் ராமருக்கு எதிரானது. பிரதமர் மோடிக்கு எதிரான அல்ல’’ எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.