குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வயலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகன் பூபதி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் வயலப்பாடி கிராமத்தில், திட்டக்குடி–அரியலூர் மெயின் ரோட்டில் புதியதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். இந்நிலையில் வீட்டையொட்டியபடி கழிவு நீர் தொட்டி (செப்டிக்டேங்) கட்டுவதற்காக சுமார் 10 அடி ஆழத்தில் குழி வெட்டி அதில் கட்டிடம் கட்டும் பணியும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று கட்டிடம் கட்டும் பணியில் வயலப்பாடி அருகே உள்ள கிழுமத்தூர் கிராமத்தை சேர்ந்த கொத்தனார்கள் கொளஞ்சி (வயது 50), செங்கமலை (22), சங்கர் (40) மற்றும் குணசேகர் (40) ஆகிய 4 பேரும் கழிவுநீர் தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டனர். கொளஞ்சி, செங்கமலை ஆகிய இருவரும் குழிக்குள் இறங்கியும், சங்கர், குணசேகரன் இருவரும் குழிக்கு மேலேயும் வேலை பார்த்தனர். அப்போது எதிர்பாராவிதமாக குழிக்கு மேலே கொட்டப்பட்டிருந்த மண் திடீரென சரிந்து குழிக்குள் விழுந்தது. இதில் கொளஞ்சியும், செங்கமலையும் மண்ணுக்குள் சிக்கி கொண்டனர்.
இதை பார்த்த வெளியே நின்றவர்கள் அவர்களை மீட்பதற்குள் கொளஞ்சி மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
செங்கமலையை படுகாயத்துடன் மீட்டனர். பின்னர் படுகாயமடைந்த செங்கமலையை சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஈடுபாடுகளில் சிக்கி இருந்த கொளஞ்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.