செய்திகள்

செவ்வாய்பேட்டை அருகே பால் முகவரிடம் ரூ.2.28 லட்சம் பறிமுதல்

செவ்வாய்பேட்டை அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் பால் முகவரிடம் ரூ.2.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

மாலை மலர்

செவ்வாய்பேட்டை:

தேர்தலில் பணப் புழக்கத்தை தடுக்க பறக்கும் படையினர் நாடு முழுவதும் தீவிர சோதனைகளை நடத்தி வருகிறார்கள்.

செவ்வாய்பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்லப் பாண்டியன் தலைமையில் வாகன சோதனை நடந்தது. நேற்று மாலை சென்னை திருவள்ளுர் நெடுஞ்சாலையில் சோதனை நடந்தது.

அப்போது கோவையில் இருந்து வந்த ஆவின் பால் முகவரின் பால் வேன் வந்தது. அதை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது பால் வேனில் இருந்தவரிடம் 2 லட்சத்து 28 ஆயிரம் இருந்தது. தான் பால் முகவர் என்றும் அது பால் கொள்முதல் செய்வதற்கான பணம் என்றும் அவர் தெரிவித்தார்.

என்றாலும், தகுந்த ஆவணங்கள் அவரிடம் இல்லை. எனவே அவரிடம் இருந்த ரூ.2.28 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடைபெறுகிறது. #LokSabhaElections2019