செய்திகள்

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராகுல் முன் காங்.கில் இணைந்தனர்

கர்நாடக மாநிலம் மைசூருவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

மைசூரு:

கர்நாடகா மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 2-வது வாரம் தேர்தல் தேதி அட்டவணை வெளியிட தலைமை தேர்தல் கமி‌ஷன் ஆலோசித்து வருகிறது.

கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் தீவிரமாக உள்ளார். தலைவர் பதவியை ஏற்ற பிறகு சந்திக்கும் முக்கிய தேர்தல் என்பதால் இதை அவர் கவுரவ பிரச்சனையாகவும் எடுத்துள்ளார். இதனால் கர்நாடகாவில் அவர் கடந்த மாதமே தேர்தல் பிரசாரம் தொடங்கி விட்டார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் 4-வது கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சாம்ராஜ்நகர், மாண்டியா, மைசூர் மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், மைசூருவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

சமீர் அகமது கான், சாலுவரயா சாமி, இக்பால் அன்சாரி, பாலகிருஷ்ணா, ரமேஷ் பந்திசித்தே கவுடா, பீமா நாயக் மற்றும் அகண்ட ஸ்ரீநிவாஸ் மூர்த்தி ஆகிய 7 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் உள்பட பலர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்போது அவர்கள் ராகுல் காந்திக்கு வீரவாள் பரிசளித்தனர். #Tamilnews

SCROLL FOR NEXT